Tuesday, October 14, 2008

ஸ்ட்ராபெர்ரி தெரியும் அதென்ன கிரேன்பெர்ரி !!!
























இதுவும் ஸ்ட்ராபெர்ரி போல ஒரு பழ வகை தான் , இங்கே இந்தியாவில் இது நிறையக் கிடைக்குமா என்ன என்பதெல்லாம் தெரியவில்லை ,ஆனால் "பெரும்பாலும் பெண்களுக்கு வரும் "சிஸ்டைடிஸ்" எனும் உபாதைக்கு இது ஒரு மிகச் சிறந்த நிவாரணி என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது .


இதை ஜூஸ் செய்தும் குடிக்கலாம் ...மாத்திரை பட்டைகளாகவும் கிடைக்கும் .


சிஸ்டைடிஸ் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை ...ஆண்களும் பாதிக்கப் படலாம் , எல்லா வயதினரையும் ithu தாக்கலாம் .


பெரும்பாலும் பெண்கள் இருபது முதல் ஐம்பத்து வயது வரை இதனால் பாதிக்கப் படுகின்றனர் .


ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் அளவற்ற எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது அடிவயிற்றில் வலி இருந்தாலோ ...கலங்கலான நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டாலோ ...சிறுநீருடன் ரத்தம் கலந்து வந்தாலோ , அல்லது இந்த அறிகுறிகளுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவஸ்தை ஏற்பட்டாலோ ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ சிஸ்டைடிஸ் உபாதையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம் .


இந்நோய் பெரும்பாலும் இ . கோலி எனும் பாக்டீரியாவால் தான் பரப்பப்படுகிரதாம் . இது சிறுகுடல் பகுதியில் காணப்படும் .


பெரும்பாலும் சுத்தமின்மை காரணமாகவும் , உடலில் ஏற்ப்படும் நீர் இழப்பின் காரணமாகவுமே இந்த பாக்டீரியா உடலில் கிட்னி கும் கூடப் பரவ வாய்ப்பு ஏற்படலாம் .
சரி...சரி .இப்படியே நீட்டிக் கொண்டு இன்னும் பத்துப் பக்கங்கள் கூட எழுதலாம் தான் ... கிரான்பெர்ரி என்ற பெயர் புதிதாக இருக்கிறதே என்று நெட்டில் தேடினால் இப்படி ஒரு பயனுள்ள விஷயம் சிக்கியது .
இந்தப் பழங்களில் சிட்ரிக் அமிலம் அபிரிமிதமாக இருப்பதால் இது இந்த உபாதையைத் தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அவ்வளவு தான் மேட்டர் !!!
கிரேன் பெர்ரி கிடைத்தால் சரி தான் .



















Friday, October 3, 2008

ஹம்பியின் நறுமணம்

கதையின் கதை :-
ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை கி.பி ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்து ஏழில் தொடங்கி கி.பி ஆயிரத்து நானூற்று எண்பத்து ஐந்து வரை சங்காமா வம்சத்து மன்னர்கள் ஆண்டனர் .இவர்களில் கி.பி ஆயிரத்து நானூற்று இருபத்து இரண்டு முதல் ஆயிரத்து நானூற்று இருபத்து ஆறு வரை ஆண்ட இரண்டாம் தேவராயன் காலத்தில் விருபாசர் கோயிலுக்கென ஒரு தேர்வீதி அமைக்கப்பட்டது .அவனே அந்தத் தேர்வீதியில் முதன் முதலாக தேர்த்திருவிழாவையும் தொடங்கி வைத்தான் .அப்போது நிக்கோலா கேன்டி என்ற ஐரோப்பியப் பயணி ஹம்பியின் திருவிழாவுக்கு முதன் முதலாக வந்து கலந்து கொண்டார் என்பது வரலாறு .அதே சமயம் கி.பி ஆயிரத்து நானூற்று எண்பத்து ஐந்த்தில் இல் சங்காமா வம்சத்தின் மூன்றாம் விருபாசனை அவனது கீழிருந்த சாளுவ நரசிம்மன் எனும் சிற்றரசன் பதவி இறக்கம் செய்தான் , பின் ஹம்பி சாளுவர்களின் வசமானது ...ஆக தேர்த்திருவிழாவையும் சங்காமர் ..சாளுவர்களுக்கிடையிலான பகைமையையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்ப்பனைக் கதையே இது ...ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அந்தத் தேர்த் திருவிழா இன்றும் கூட ஹம்பியில் மார்ச் ...ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது என்பது தான் .

இடம் - ஹம்பி அல்லது விஜயநகரம்

வருடம் -கி.பி. ஆயிரத்து நானூற்று இருபத்து மூன்று

மாதம் - மார்ச்

நேரம் -அந்தி மாலைப் பொழுது

நிகோலாவுக்கு நகரெங்கும் ஒருவித நறுமணம் நிறைந்த கோலாகலம் நிரம்பி வழிவதைப் போல பிரமை ஏற்ப்பட்டது ,கூட நடந்து வந்து கொண்டிருந்த நண்பன் ஹரிஹரனிடம் மெல்லத் திரும்பினான் .நண்பா இதென்ன வாசனை ? என் மனம் இங்கு வந்த நாள் முதல் இதில் மிகவும் லயித்து போகிறது, நீ மட்டும் உடனில்லா விட்டால் நான் இதன் ஏகாந்தத்தில் மயங்கிப் பொய் இங்கேயே இரவு முழுவதும் நின்றாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை ! இத்தனை சுகந்தமாய் இருக்கிறதே இதென்ன ஹரிஹரா ?நிகோலாவின் ஆச்சர்யத்தைக் கண்டு மெல்ல நகைத்தஹரிஹரன் ,வேடிக்கையாக நண்பனின் முதுகில் ஓங்கிக்குத்தினான் ;நிகோலா நீ ஐரோப்பாவிலிருந்து யாத்ரிகனாக இங்கே வந்தாலும் வந்தாய் ; எங்கள் ஹம்பியில் வான் மழை பெய்கிறதோ இல்லையோ உன்னிடமிருந்து ஒரே கேள்வி மழை தான் போ என்றான் .ஹரிஹரன் கி.பி ஆயிரத்து நானூற்று இருபத்து இரண்டிலிருந்து இருபது ஆறு வரை ஹம்பியை ஆண்டு வந்த சங்காமா வம்சத்து மன்னன் இரண்டாம் தேவராயானின் சேனாதிபதி அப்பண்ணாவின் கடை இளவல் , நாளந்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலபோன நேரத்தில் நிகோலா எனும் வெள்ளை நண்பன் கிடைத்தான் .நிகோலா வேற்று தேசத்தவன் ஆனாலும் பாரதத்தின் தென்பகுதியில் சில காலம் தங்கி அங்குள்ள மக்களுடன் அளவளாவி அவர்களது வாழ்வுமுறைகளை தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடநிருந்தான் .அந்த ஆவலே அவனை ஹரிஹரனின் நண்பனாக்கி இன்று ஹம்பிக்கும் அழைத்து வந்து அதன் அழகான தேர்வீதியில் லயித்துப் போய் நடக்க வைத்திருக்கிறது .நகரில் தென்படும் சிறு சிறு விஷயங்களைக் கூட கண்டு அதிசயப்பட்டு கேள்வி மேல் கேள்வியை துளைத்தெடுக்கும் நிகோலாவை புன்னகையுடன் பார்த்து விட்டு நடையைத் தொடர்ந்தான் ஹரிஹரன் ,என்ன நண்பா , என் கேள்விக்கு நீ இன்னும் பதில் அளிக்கவேயில்லையே ; சொல் ஹரிஹரா ...இதென்ன மணம் ...மனதைக் கிறக்கும் நறுமணம் ? எங்கிருந்து தான் வருகிறது ? அதிலும் ஒவ்வொரு அந்தி மாலையிலும் என்னை ஏதோ செய்து அடிமையாகும் இந்த சுகந்தம் எதற்காகவேன்றேனும் சொல்லி விடேன் ...நிகோலா விழி மூடி நாசி நிரம்ப காற்றை உள்ளிழுத்து அனுபவித்துச் சொன்னான் .சற்றே விஷமம் கலந்த குறும்போடு நிகோலாவை ஏறிட்டு நோக்கிய ஹரிஹரன் ,அதே வாலிப துடுக்குடன் சரி நான் ஒன்று கேட்கிறேன் , பட்டென்று பதில் சொல் பார்போம் ,இந்த நறுமணத்தை நுகர்ந்தவுடன் உனக்கு என்னென்ன ஞாபகங்கள் வந்தனவோ உண்மை சொல் நிகோலா என்றான் .இன்னும்...இன்னும் ...இன்னும் நன்றாக அந்தப் புகை போன்ற வாசம் நிறைந்த காற்றை மூக்கால் முடிந்தவரை நுரையீரல் முழுக்க நிரப்பி சுகானுபவமாய் கண்களை மூடியவாறு மெய் மறந்தவன் போல நிகோலா மென்குரலில் ரகசியம் போல ;சொல்லட்டுமா ஹரிஹரா என்றான் .

Monday, September 22, 2008

"சிட்டுக்குருவி "

இது நான் முதல் முறையாக முழுதாக முடித்த முதல் சிறுகதை
உங்களுக்கு இதைப் படிக்க நேரம் இருக்குமா என்ன ? என்பதெல்லாம் எனக்கு

தெரியவில்லை , ஆனாலும் அனிச்சை செயல் போல அனுப்புகிறேன் .
தங்களது கருத்துகளையும் , யோசனைகளையும் எதிர்பார்த்து தான் ....
முடிந்தால் பதில் எழுதுங்கள்

.
"சிட்டுக்குருவி"


திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது ; கதை பேச மாமா இல்லை , கேலி செய்ய

அத்தை இல்லை , கொஞ்சிக் கொண்டே உருட்டி உருட்டி உள்ளங்கையில் சாதம்

வைக்க அம்மா இல்லை .சித்தி கூட எங்கேயோ தூரத்தில் இருந்து கொண்டு

எப்போதோ தொலை பேசுகிறாள் , சித்தப்பா வீடு தங்குவது அரிதாகிப் போய்

நெடுநாளகிறது, பாட்டிக்கு இந்த பட்டணம் பிடிக்காமல் ஊரோடு போய் விட்டாள்,

தாத்தாவோ ரேஷன் கடை ,மளிகைக் கடை ,மார்கெட் என்று ஓய்ந்து பின்மாலையில்

அவர் வயது மனிதர்களைத் தேடி கோயில் , பார்க் என்று போய் விடுகிறார் , என்னை

யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை !!! .

வேப்பமரமும் , புளியமரமும் இல்லாத இந்த ஒன்டிக்குடித்தன நகரத்து நரக வீடு

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லபோவதை போல தினமும் கெட்ட கெட்ட

கனவுகளில் தூங்கவே முடியாத சோகத்தில் தான் இன்று இந்த பின் மத்தியான

நேரத்தில் கால் காசு பெறாத இந்த "சிட்டுகுருவியுடன்" விருதாவாய் பேசிக்கொண்டு

இருக்கிறேன் .

சிட்டு குருவி "விசுக் விசுக்கென்று " பறந்து கொண்டிருந்தது முன் புற பொது

தாழ்வாரத்தில் , யாரோ காய வைத்த வடகத்தை கொத்தி கொத்தி குட்டி மண்டையை

'விலுக் விலுக்கென்று' ஆட்டியவாறு சிறிது வாயிலும் சிறிது வாசல் படியிலுமாக சிந்தி

சிதறி விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒரு நொடியில் அதன் பார்வையில்

நான் பட்டிருக்க வேண்டும் ,

அதுவாகத் தான் என்னிடம் பேச ஆரம்பித்தது ; முதலில் பேச்சு எப்படி தொடங்கியது

என்று யோசித்தேன் நான் !. அதற்கு என் பெயரெல்லாம் தெரிய சாத்தியமே இல்லை ,

ஒருமையில் தான் பேசிகொண்டிருந்தது . இனுக்கி இனுக்கியாய் பிய்த்த வடகத்தை

அலகில் சிக்க வைக்க முயன்று தோற்று போன வெறுப்போ என்னவோ ? சும்மா ஏன்

என்னையே பார்கிராய் ? என்று காட்டமாய் கேட்டு விட்டு வெளிப்புற கேட் வரை

பறந்து காட்டி விட்டு திரும்ப வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு " பதிலை

சொல்லி தொலை என்பதை போல "என்னையே இலக்கு மாற்றி மாற்றி

பார்த்துக்கொண்டே இருந்தது .

ஒரு சிட்டுக்குருவி பேசுமா ? என்பதையே நம்ப முடியாமலிருந்த நான் அதன்

கேள்வியில் திடுக்கிட்டு போனேன் . பேசும் குருவியா இது ? என்ற உற்சாகத்தில்

சந்தோசம் பீறிட்டுக் கொண்டு வர என்ன கேட்டாய் குருவி ? என்றேன் நான் ;

குருவி இளக்காரமாய் சிரித்துக்கொண்டது , மறுபடி பேச முயலவேயில்லை ;

பார்த்துக் கொண்டிருக்கும் போதே குருவி ஜன்னலில் இருந்து எம்பி பறக்க

போவதை போல போக்கு காட்டியது,பிறகு மறுபடி என்னை நீயும் வருகிறாயா

என்னோடு ? என்பதை போல சும்மா பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்டது, அடுத்து

என்ன செய்யப் போகிறாய் நீ ? என்று நானும் விடாமல் அதையே கவனிக்க

தொடங்கினேன். குருவி கொஞ்ச நேரம் பார்த்த பின் "எனக்கு ஒரு தோசை தாயேன்"

என்றது . இல்லை...

கெஞ்சுதலாய் எல்லாம் இல்லை . சட்டமாய் கேட்டது ; நீ எனக்கு கொடுத்து தான்

ஆகவேண்டும் என்று தொனியில் கேட்டதோடு "விருட்டென்று " சமையல்

கட்டுக்குள்ளும் பறந்துபோய் விட்டது . என்ன திமிர் இந்த குஞ்சு குருவிக்கு என்று

செல்ல கோபத்தோடு நானும் பின்தொடாந்தேன். வேறு என்ன செய்ய வீட்டில்

அப்போது யாரும் இல்லை ! அம்மா குவைத்திற்கு வீட்டு நர்சாக காண்டிராக்டில் போய்

மாதம் ஆறு ஆகிறது . ஊரிலிருந்தால் கடன்கொடுத்தவர்களின் தொல்லை கழுத்தை

நெரிக்கும் என்று தான் சென்னைக்கு வந்து ஒரு மில் முதலாளிக்கு கார் டிரைவர்

ஆகிவிட்டார் அப்பா ,பாட்டி தான் ஊருக்குள் எதையோ சொல்லி சமாளித்து கொண்டு

வீட்டோடு இருக்கிறாள் , ஊரை விட மனமில்லை என்பதெல்லாம் வெறும் நகாசுப்

பேச்சு , அவளும் வந்து விட்டால் வீட்டை பண்ணை வீட்டு ராமசாமி அடிமாட்டு

விலைக்கு எடுத்துக் கொண்டு வாங்கிய கடனுக்கு நெடுநாளாய் கட்டாமலிருந்த

வட்டிக்கு கழித்து விடுவாரோ என்ற அதீத பயம் தான் காரணம் ! குருவி

சாவதானமாய் சமையல் உள்ளில் புகுந்து தோசை மூடி வைத்த தட்டத்தை அலகால்

இடறித் தள்ளி விட்டு "சீனி போடு கொஞ்சம் என்றது" , என்னால் சிரிப்பை அடக்கவே

முடியவில்லை . சிரிக்கும் என்னை ஒரு தூசி போல பார்த்து விட்டு , அதுவே பறந்து

போய் நல்லெண்ணெய் இருந்த வால்கின்னத்தை தூக்க முடியாமல் தூக்க முயன்று

எண்ணையை கொட்டி கவிழ்த்து கொண்டது தோசை இருந்த தட்டில்
ஐயோ ! ஏய் குருவி என்னிடம் கேட்டால் நான் எடுத்து தந்திருக்க மாட்டேனா ? இப்படி

எண்ணெய் முழுசும் கொட்டி தீர்த்து விட்டாயே ! மறுபடி எண்ணெய் வாங்க காசுக்கு

நின்றால் அப்பா ஆயிரம் கேள்வி கேட்பாரே! உன்னால் எனக்கு நேரம் சரியில்லை

இன்று என்றேன் நான் எண்ணெய் இழந்துவிட்ட ஆற்றாமையில் ... குருவி

அதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை , அது பாட்டுக்கு ஒரு

தோசையை அறையும் குறையுமாய் சிந்தி சிதறி குதறிப் போட்டுவிட்டு ... அப்புறம்

என்ன ? என்று தண்ணி தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்தது . தொட்டி தளும்ப

நீர் பிடித்து ஊற்றி வைத்திருந்தேன் நான் ; விழுந்து விடாதே .... பார்த்து உட்காரேன் ;

நான் தான் பதறினேனே தவிர அது என்னவோ தேர்ந்த நீச்சல் வீராங்கனை போல

விளிம்பில் இதன் அசைவில் தளும்பி மேலெழுந்த சின்ன தண்ணீர் துள்ளலில்

தலையை விட்டு ஆட்டிப் புரட்டி ஒரு மினி தலைகுளியல் செய்து கொண்டது , பார்க்க

பார்க்க அதிசயமாய் இருந்தது ;
அதோடு முடியவில்லை கதை ,குளிர்ந்த தண்ணீர் பட்டதும் ஒட்டிக்கொண்ட

சிறகுகளை சடசடவென அடித்து தூசிபடலம் போல நீர்படலத்தை தெறிக்க விட்டு

புகை போக்கி ஓட்டை வழியே அடுப்படி மேல் விழுந்த வட்ட சூரிய ஒளியில் போய்

நின்று கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பி வெப்பம் வாங்கி கதகதப்பாகிக்

கொண்டது , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு " அது குருவியாய்

தெரியவில்லை ஏதோ விருந்துக்கு வந்த அத்தை மகளை கூட நின்று பார்ப்பதை

போல ஒரு தோழமை உணர்வு சட்டென மேலெழுந்து அந்த அறை முழுதும் நிரம்பி

வழிந்து கசிந்தது .
நான் இங்கே இப்படிக் குருவியோடு குருவியாய் லயித்து நிற்பது பால்கார

அண்ணாமலைக்கு தெரியுமா என்ன? எப்போதும் நேரம் தப்பி பால் கொண்டு வந்து

வசவுகளை அழுக்கு வெள்ளை வேஸ்டி நிறைய வாங்கி கட்டிக்கொண்டு போகும்

அவர் அன்று சரியான நேரத்துக்கு பாலுக்கு மணியடித்தார். போய் வாங்கி வைத்து

விட்டு திரும்ப வரும் முன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத சென்னை நகரத்து

வானிலை மிக மோசமாகி மழை தூரலிட்டது.

"ஐயோ அப்பாவின் யூனிபார்ம் சட்டை....!!!" காலையில் துவைத்து போட்டது ஞாபகம்

வர வேக வேகமாய் மூச்சு வாங்க மொட்டை மாடிக்கு ஓடினேன் . நல்ல வேலை

ரொம்பவும் நனையத் தொடங்கும்

முன் கொடியிலிருந்து பிடுங்கி கொண்டு வந்து விட்ட திருப்தியில் உட்புற

கொடிகயிற்றில் காயப்போட்டு விட்டு குருவியை தேடிக்கொண்டு மீண்டும் உள்ளே

போனேன் . காணோம் ....! குருவி அங்கே இல்லை ஏய் குருவி அதற்குள்ளே எங்கே

போய் விட்டாய் ? மழை வேறு பலமாய் வரும் போல தெரிகிறது... நனைந்து விட்டால்

என்ன செய்வாய் குட்டி பறவையே ? நான் எனக்குள் பேசிக்கொண்டே குருவியை

வீட்டுக்கு உள்ளே ... வெளியே என்று கொஞ்ச நேரம் தேடினேன் . காணோம் ...! எங்கும்

குருவி இல்லை . ஐந்து மணிக்கு அப்பா வந்து விட்டார் . ஆறு மணிக்கு தாத்தா

வந்தார் . குருவி மட்டும் வரவேயில்லை . நான் குருவியை நினைத்துக் கொண்டே

இருவருக்கும் காப்பி போட்டுக் கொடுத்தேன் , வாசல் தெளித்து கோலம் போட்டேன்

. இரவுக்கு மாவு பிசைந்து கோதுமை சப்பாத்தி போட்டு , தேங்காய் சட்னி வைத்து

இருவருக்கும் கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்தேன் . எங்கே போயிருக்கும்

இந்த மழையில் குருவி !!! என்று யோசித்துக் கொண்டே சமைத்து சாப்பிட்ட

பாத்திரங்களை கழுவி கவிழ்த்தேன் . குருவியை காணவே காணோம் ...! இனிமேலா

வரபோகிறது.... மணி ஒன்பது ஆகி விட்டது . அப்பா நைட் சிப்டுக்கு புறப்பட்டு

விட்டார் , தாத்தா வெளித்திண்ணையில் ரேஷன் கடை சேலை விரித்துப் படுத்து

விட்டார் . மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது . இரவு வானத்தை மழை

முகமூடிக் கொள்ளைக் காரன் போல கருப்பு துணி போர்த்தி கண்ணுக்குத் தெரியாமல்

மறைத்து சாகசம் செய்து விட்ட திருப்தியில் ஆர்பாட்டமின்றி சிறு ஓசையுடன்

இறங்கி பூமியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது . கல்யாணமாகி வருடம் சில கடந்து

நிதானமாகி விட்ட தம்பதியர் போல பூமிக்கும் மழைக்குமான சங்கமம் சிறு ரகசிய

சம்பாசனையுடன் விடியும் வரை தொடர்ந்...தது....!!! குருவி எங்கே போயிருக்குமோ ?

மழைக்கு எங்கே ஒதுங்கியிருக்குமோ ? அதன் கூடு எந்த மரத்தில் , எவ்வளவு தூரத்தில்

இருக்குமோ ? இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்குமோ குருவி?

குருவி...குருவி...குருவி !!! ஏய் ! குருவி ... சிட்டுக் குருவி...... சிட்டுக்......குருவி ...எங்கே

போய்விட்டாய் என் செல்லக் குருவி ?
குருவியை நினைத்துக் கொண்டே தூங்கினாலும் கனவில் என்னவோ குருவி எல்லாம்

வரவில்லை ,ஒரு வேளை கனவே வரவில்லையோ என்னவோ ?! காலை டிபன்

தயாரிக்கும் அவசரத்திலும் அதென்னவோ அந்த காணமல் போன குருவியை மட்டும்

மறக்கவே முடியவில்லை ....இன்றைக்கு மறுபடி வருமோ ? என்ற எதிர்பார்போடு தான்

சாதம் வைத்து , சாம்பார் வைத்து ...உருளைக் கிழங்கு வறுவல் செய்து , அப்பளம்

பொரித்தேன்.குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா ? என்ற யோசனையோடு தான்

ஒவ்வொன்றையும் செய்து மூடி வைத்தேன் . மழை நின்று போன விடிகாலையும்

வழக்கம் போலத்தான் விடிந்திருந்தது , ஆனாலும் காற்றில் ஒரு ஈரவாடை பரவி

மொட்டைமாடியில் துணி காயபோட்டு விட்டு , கட்டைசுவற்றில் கைவைத்து கீழே

விரையும் வாகனங்களைப் பார்த்தவாறு ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்து

மெதுவாய் வெளியேபரவ விடும் போது ஈரத்தோடு ஈரமாய் ஒரு குளிரான சந்தோசம்

தேகமெங்கும் சந்தனம் போல அப்பிக்கொள்ளத்தான் செய்கிறது ஒவ்வொரு

முறையும் !

குருவிக்கு குளிறாதா ? பார்த்தால் கேட்க வேண்டும் ...."வருமா? வந்தால்

கேட்க வேண்டும் !!!" என்று கேள்வியை ஓரமாய் மனதில் போட்டு வைத்தேன் . நேற்று

போல இல்லாமல் பால்கார அண்ணாமலை இன்று பழக்க தோசமாய் லேட்டாகத்தான்

வந்தார் ... ஒன்றும் சொல்வதற்கின்றி பேசாமல் பாலை வாங்கி மூடி வைத்தேன் .

அம்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது; மாதம் ஒருமுறை அரைமணி

நேரம் பேசுவாள் அம்மா , ஏதோ திருவிழா போல துள்ளிக்கொண்டு பேசுவதற்கு

ஓடுவேன் நான் . இன்று அப்படி இல்லை , வெகு நிதானமாய் போய் விட்டு திரும்பிய

என்னை தாத்தா அதிசயம் போல பார்த்துவிட்டு குனிந்து மறுபடி பேப்பர் படிக்க

ஆரம்பித்தார். அப்பா வந்தார் மறுபடி காபி போட்டேன் , இரவு சமைத்தேன் ,

எல்லோரும் சாப்பிட்டோம். இரவு ஷிப்ட் வந்தது .

அப்பா கிளம்பி போய் விட்டார் . தாத்தா திண்ணையில் யாரோ நண்பரோடு பேசி

கொண்டிருந்தார் , அவர் அப்படியே தூங்கி விடுவார் , இனி உள்ளே வரமாட்டார் ,

தண்ணீர் முதலிலேயே சொம்பில் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வார் .

சின்ன வீடு தான் .... ஆனாலும் தனிமை ...ருஷியானதா ?... எப்போதும்

தனிமை ....ருஷியானதா...?!

பெரிய பங்களா வீடெல்லாம் கழுத்து வரை கடனோடு ஊரில் இருக்கிறது .... கோயில்

கோபுரத்தில் அரக்கி போன்ற தோற்றத்துடன் கத்தி பிடித்து நிற்கும் காவற்காரி

பொம்மை போல பாட்டி அங்கே இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு தான்

இருப்பாள் என நினைக்கையில் நெஞ்சுக்குள் பிசைகிறது ,

தாத்தா .... பாவம் ?

அப்பா .... பாவம் தான் ?

அம்மா ...அவளும் கூட பாவம் தானே ? !

அப்படியானால் நான் ???!!!

அந்த குருவி... ?!

தூரத்தில் எங்கேயோ பாட்டு சத்தம் ... "சிட்டுக்குருவி ....சிட்டுக்குருவி ...சேதி

தெரியுமா ? என்னை விட்டு பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ..."

ஏய் குருவி...சிட்டுக் குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிகிட்டு
நீ இங்கே வந்து கூடு கட்டு ...

இன்றைக்கு சிட்டுக் குருவி ஸ்பெஷல் போல ரேடியோவில்

கடைசியில் ...

எப்போதும் போல் ... ஒற்றையாய் தெளிவான சிந்தனைகள் ஏதுமின்றி தூங்கத்

தொடங்கினேன் நா....னு...ம் !!!




--------------------------------------------------------------******கயல் ******------------------------------------------------------------
kayal
" கடந்து போனவள் "



எதிர் வெயிலுக்கு முகம் சுருக்கி தன் முன்னே நடந்து போய்க் கொண்டு இருந்த அந்தப் பெண்ணை முருகேசனுக்கு கொஞ்ச நாளாய் நன்றாகவே தெரியும் . தினமும் இந்த வழியாகத்தானே போகிறாள் ....வருகிறாள் ...; ஒரு முறையேனும் அவள் இவனைத் திரும்பி பார்த்ததில்லை ... இவனும் அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று பார்த்ததில்லை ... பழக்கதோஷம் என்பார்களே அப்படித்தான் இதுவும் ,

முருகேசன் அயன் கடை வைத்திருந்த தெரு அப்பெண் குடியிருக்கும் தெருவாகி விட்டதால் அடிக்கடி பார்வையில் பட நேர்ந்தது ...அதுவே பின்னாளில் அவளைப் பற்றி அவன் யோசிக்கவும் வழிவகுத்தது . ஒருநாள் அப்பெண்ணைப் தெருவில் பார்க்கா விட்டாலும் " இன்னும் காணோமே ... என்று மனம் கேள்வி கேட்கும் நிலை வந்து விட்டது இப்போதெல்லாம் ...

பசி வந்ததும் கூடவே தங்கத்தின் ஞாபகம் வந்தது . மதியம் என்ன செய்து வைத்திருப்பாளோ ? எட்டு மணிக்கெல்லாம் " மீன் ...மீன் ...மீனோய்... வஞ்சிரம் மீனோய் ! என்று கூவி கொண்டு போன மீன்காரனின் குரல் செவியில் இன்னும் கூட தேனாய் தித்தித்தது , இன்றைக்கு மீன் செய்ய சொல்லி இருக்கலாம் ...!!! தங்கம் எது செய்தாலும் வாய்க்கு ருஷியாகத்தான் செய்வாள் .

கோழிகறி ஆகட்டும் ...ஆட்டுக்கறி ஆகட்டும் ...உண்டு முடித்தபின் ஆளை ஒரு அசத்து அசத்தி விடும் . தங்கத்துக்கும் , முருகேசனுக்கும் கல்யாணமாகி ஐந்து வருடம் ஓடி விட்டாலும் சின்னஞ்சிறுசுகள் போலத் தான் இப்போதும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கும் அவர்களது சம்பாசனையில் . பிள்ளையில்லாத வெறுமை கூட இதற்கு காரணமாயிருக்குமோ என்னவோ?

பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணின் பெயர் முருகேசனுக்குத் தெரியாது . கூட ஒரு குழந்தை நடந்து போகும் அது அவளுடைய குழந்தை தான் . வாய் ஓயாமல் பேசிக் கொண்டே போகும் . "மம்மி நீ வர வேண்டாம் னு சொல்றேன்ல" நான் தான் இப்ப பிக் கேர்ள்
ஆயிட்டேன் ல"

அவள் அதிகம் பேச மாட்டாள் , "ரோட்டைப் பார்த்து நட குட்டிம்மா " இது தான் அவள் பேசி அவன் கேட்ட வார்த்தைகள் ,

மாமியார் தூரத்தில் துணி மூட்டையுடன் வருவது இங்கிருந்து நிழல் அசைவாய் கண்ணில் பட்டது , பாவம் இந்த வயதிலும் கடின உழைப்பாளி , வீடு வீடாய் போய் அயனுக்குத் துணி வாங்கி வருவாள் அதை பெட்டி போட்டுத் தந்ததும் மறுபடி வீடு வீடாய் போய் கொடுத்து பணம் வாங்கி கொண்டு வருவாள் . முருகேசனுக்கு நல்ல சப்போர்ட் , என்று பக்கத்தில் கறிக்கடை வைத்திருக்கும் முனியசாமி சிலாகித்துச் சொல்லிக் கொள்வார்
.
மாமியார் வெயிலை உடல் முழுதும் உறிஞ்சி விட்ட ஆயசத்தில் கருத்துப் போன முகத்தைத் அழுந்தத் துடைத்து விட்டு , பானையில் இருந்து சொமபு சொம்பாய் நீர் மொண்டு குடித்து விட்டு கொஞ்சம் முகத்திலும் சுளீர் ...சுளீரென்று தண்ணீரால் முகத்தில் அடித்துக் கொண்டு துடைக்காமல் விட்டு விட்டாள். காற்று படப் பட இதமாய் இருக்கும் போல ... "சரி முருகேசு நீ வீட்டுக்குப் போ ... மணி ஆவுது பாரு "
நல்லவள் தான் ஆனால் வாய் கொஞ்சம் ஜாஸ்தி ... பேச்சு அதிகாரமாய் தான் இருக்கும் , இதனால் அயனுக்கு தருகிறவர்கள் ஒன்றிரண்டு பேருடன் அவ்வப்போது சின்ன சின்னத் தகராறும் செய்து கொள்வாள் ,பிறகு மறுபடி அவளே அதை சரி செய்து விடுவாள் ,

பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணுடன் கூட ஒருமுறை சின்ன சண்டை போட்டிருக்கிறாள் , அன்றைக்கு முருகேசன் கடைக்கு வராத நாள் .மச்சினன் சித்த நாதனை கடையில் நிற்க வைத்து விட்டு புதுப்பேட்டையில் இருக்கும் ஒன்று விட்ட தம்பி மனைவியின் நாத்தனார் இறந்த துஷ்டி கேட்க போயிருந்தான் . அந்தப் பெண் கடைக்கு துணி கொண்டு வந்து அவன் பார்த்ததில்லை ?

மாமியார் தான் போய் வாங்கி வருவாள் , அவசரமென்றால் அவளது கணவன் வந்து பெட்டி போட்ட துணிகளை வாங்கி போவான் . அவள் வீட்டு துணிகள் இவனுக்கு நன்றாகவே அத்துப்படி கணவனது உடைகள் நிச்சயம் விலை கூடுதலாய்த் தான் இருக்கும் ,அருமையான மேல்சட்டைகள் , பெரும்பாலும் அவளது துணிகள் வராது . எப்போதாவது ஒரு சுடிதார் வரும் ,இல்லாவிட்டால் பட்டுப்புடவை வரும் . குழந்தையின் பட்டுப்பாவாடை ,சட்டை ,இப்படி கொஞ்சம் வரும் . அவள் சுடிதார் அயனுக்குப் போடததாலோ என்னவோ ! தினம் அவள் கடை தாண்டிப் போகையில் இவன் அவளது உடை பார்க்க ஆரம்பித்தான் .

ஓ... இன்னைக்கு பச்சை கலர் சுடிதார் ! இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதான் சிவப்புக் கலர் சுடிதாரோ ..! அட இந்த ஊதா கலர் சுடிதார் அந்தப் புள்ள நிறத்துக்கு அவ்ளோ எடுப்பா இல்லையோ ...?! இதென்ன இவ்ளோ சுருக்கஞ் சுருக்கமா இருக்கு ? நல்லா தண்ணிய உதறி சுர்ருன்னு இழுத்து தேய்ச்சா அப்படியே கம்பியாட்டம் நிக்கும் இந்த வெள்ளைக் காட்டன் சுடிதார் ... சேலை கட்டவே மாட்டா போல ?

ஒருமுறை எதேச்சையாய் தங்கத்திடம் கூற அவள் பார்த்த கேலிப் பார்வையில் பிறகு இவன் கருத்து கந்தசாமி போல அவளிடம் எல்லாம் சொல்வதை நிறுத்தி விட்டான் .

இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்தே மனம் ஏதோ ஒரு அவஸ்தையில் பர பரவென்று தான் இருந்தது , எப்போதாவது இப்படி நிகழ்வதுண்டு தான் ,

பதினெட்டு வயதில் முதல் முறை சொந்த அத்தை மகள் கனகம் வயசுக்கு வந்ததும் கூட்டாளிகளின் கேலி கிண்டலுக்கு மத்தியில் அவளுக்கு குச்சு கட்டப் போகையில் இப்படித்தான் ஆனதாய் ஞாபகம்....!!!

பிறகொரு முறை ; மதுரை அழகர் கோயிலின் தீர்த்த தொட்டியில் குளித்து விட்டு கீழே வருகையில் குரங்குக்கு பயந்து மிரண்டு ஒதுங்குவதாய் நினைத்து தடுமாறி விழப்போன பத்து வயது பெண் குழந்தை ஒன்று இவன் மீது மோதி நிற்க பதறிப் போய் தாங்கினான் . நடுங்கி ஓய்ந்த குழந்தை சரியானபின் சிறு புன்னகையுடன் ; "தேங்க்ஸ் அங்கிள் " என்று புறங்கையில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட . அப்போதும் இப்படித்தான் பர பரத்து சிலிர்த்தது மனசு .

பிறகு தங்கத்துக்கும் அவனுக்கும் கல்யாணமான அன்று இரவில் அவளுக்காக தனி அறையில் காத்திருக்கும் போது கூட மனம் இப்படி தான் .... வெட்ட வெளியில் சீறும் காற்றில் ஒற்றையாய் கொடியில் சட சடக்கும் சல்லாத் துணி போல் பட பட வென அடித்துக் கொண்டு பர பரத்து அலைந்தது .

இது போல சொல்லிக்கொள்ள உதாரணங்கள் இன்னும் கூட சில உண்டு அவனுக்கு .... இன்று என்ன வரப் போகிறதோ ?!

போனவளை இன்னும் காணோமே ?! யோசனையுடன் அவள் போன திக்கை யதேச்சையாய் பார்த்தால் அவள் கணவன் தான் என்றுமில்லா அவசரகதியில் வண்டியை அலற விட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான் . கொஞ்சம் மெதுவாய் போனால் தான் என்ன ? மனதோடு சொல்லிக் கொண்டான் .

அவளைக் காணோம் , இந்த வழியாகத்தானே வருவாள் என்று மறு படி சொல்லிக்கொண்டு , மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுப் போனான் . சாப்பிட்டு விட்டு ஒரு அரை மணி தூங்குவான் ,இன்றும் அப்படிப் படுத்தான் . காலையிலிருந்து உள்ளே எழுந்து ஆடிக் கொண்டு இருந்த மனப் பாம்பின் சீற்றம் தங்கம் இவன் கேட்காமலே மனதறிந்து செய்து வைத்த வஞ்சிரம் மீனில் சற்றே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே தூங்கி விட்டான் போல ....!

தங்கம் டீ போட்டுக் கொண்டு எழுப்பித் தரும் போது மணி நான்கை தொட்டிருந்தது , மாமியார் புலம்பிக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாய் கிளம்பி போனான் . மெல்லத் தான் போயேன் ....ஏன் ஓடற ...? தங்கம் பேசியவாறு பின்னோடு அவனுடனே கடைக்கு வந்தாள் ...கொஞ்ச நேரம் இருந்துவ்விட்டு விளக்கு வைக்க வீட்டுக்குப் போவாள் அவள் .

கடைக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யமான இன்ப அதிர்ச்சி மேலெழும்பி குதியாளம் போடாத குறை தான் , அந்தப் பெண் இரண்டு பெரிய கட்டை பைகள் நிறைய அயனுக்குத் துணிகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தாள்.

அன்றைக்கு முருகேசன் வழக்கத்தை விட ரொம்ப சந்தோசமாய் மனைவியிடமும், மாமியாரிடமும் பேசிச் சிரித்தவாறு துணிகளைப் பெட்டி போட்டு முடித்தான் . இனிமேல் அவள் வீட்டுத் துணிகள் மறுபடியும் இங்கே தான் வரும் . அவள் வந்ததில் இவனுக்கு என்ன சந்தோசமோ ???!!! அவனுக்கே புரியவில்லை தான் ...

ஆனாலும் குதூகலமாய் ராத்திரிக்கு தங்கத்துக்கு அல்வா வாங்கிக் கொண்டு போனான் வீட்டுக்கு .. என்னய்யா இது ? சனிக்கிழம தான வாங்கிட்டு வருவா ... இன்னிக்கி என்னவாம் ..என்று வெட்கச் சிரிப்போடு வாங்கி வைத்த மனைவியின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி விட்டு குளிக்கப் போனான் . இரவு நன்றாகத் தூக்கம் வந்தது . மறுநாள் வழக்கத்தை விட வேகமாய் கடை திறந்து வேலையை ஆரம்பித்தான் .

அவன் கடைக்கு அடுத்து ஒரு மளிகைக் கடை, ஒரு ஜெராக்ஸ் கடை .ஒரு கல்யாணமண்டபம் ,அதற்கும் அப்பால் வக்கீல் சீதாராமன் வீட்டை அடுத்து அவள் குடியிருக்கும் வீடு தான் , அது ஒரு அபார்ட்மென்ட் , மொத்தம் இருபது வீடுகள் ,அவள் இருப்பது முதல் பிளாட்டில் தான் , முருகேசன் கடை திறக்கும் போது நேரம் ஏழரை மணி இருக்கும் . வழக்கமாக எட்டு மணிக்கு தான் போவான், இன்று என்னவோ ஒரு இனம் புரியா உல்லாஷம்.

யதேச்சையாகத்தான் பார்த்தான் .... அவள் பிளாட்டின் முன்புறம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது . நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கும் போல இவன் இப்போது தான் பார்கிறான் .

யாரோ வீடு மாற்றிக் கொண்டு போகப் போகிறார்கள் போல ... அந்த பிளாட்டில் இப்படித்தான் அடிக்கடி ஒரு வீட்டில் மட்டும் இப்படி நிகழும் . ராசி இல்லாத வீடாம் அது ... என்ன ராசியோ ?! என்ன நம்பிக்கையோ ? போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும் ...! கிண்டலாய் உள்ளே நகைத்துக் கொண்ட முருகேசன் தன் வேலையைப் பார்க்கலானான் .

நேரம் போய்க் கொண்டே இருந்தது . அந்தப் பெண்ணைக் காணோம் ...! குழந்தையையும் பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை பெட்டி போடப் பட்ட துணிகளையும் வாங்கிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை . சரி வரும் போது வரட்டும் .... இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ; அந்த லாரி தாண்டி முகமெல்லாம் சந்தோசம் பூத்துக் குலுங்க அவள் ....அவள் தான்.... அந்தப் பெண் ; வந்து கொண்டிருந்தாள் .... இவனது கடையை நோக்கி ...

துணி வாங்க வருகிறாள் போல ... வரட்டும் ... வரட்டும் ... அவளது சந்தோசம் ' முருகேசனையும் தொற்றிக் கொள்ள ... அப்போது சூரியன் எப் எம் மில் "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" பாடல் முடிந்து "வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே" பாடல் மாயவரம் ராதா ,மதுரை சுப்பு , தேனாம் பேட்டை மல்லிகா ,ஒன்டிபுதூர் அம்பிகா ஆகியோருக்காக ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள்;

மெல்லப் தனக்குள் பாடிக்கொண்டே அவள் கிட்டே வரக் காத்திருந்தான் ... வந்தாள் ... வந்தவள் ... அவன் மாமியாரிடம் . எவ்ளோ ஆச்சு ஆயா ? என்று கேட்டு பணம் தந்து துணி வாங்கி நகரப் போனாள். வக்கீல் சீதாராமன் மனைவி காம்பௌண்டில் இருந்து எட்டிப் பார்த்து சத்தமாய் கேட்டாள்...

"ஏண்டிம்மா கல்பனா .. எத்தனை மணிக்கு கிளம்பறேல் ...சாமான் சட்டேல்ல்லாம் பாத்து பாக் பண்ணிட்டேலா இல்லியோ ? " அவள் மாமிக்கு என்ன பதில் சொன்னாலோ !!! அவளது வீட்டைப் போலவே இப்போது இவனது மனமும் காலியாக .... ஒரு கணம் முகத்தில் சந்தோசம் வடிந்து சங்கடம் காட்டி நின்றவன் .....

சின்னதாய் உள்ளே ஒரு குரல் ஓ... கல்பனாவா ...இதான் உன் பேரா ..? என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டது.

இந்தக் கல்பனா இனி அவன் கடை தாண்டி .. அந்தப் பக்கம் போக மாட்டாள் .

இந்தப் பக்கமும் போக மாட்டாள் ... ஏன் இடப்பக்கம் ... வலப்பக்கம் என்று எந்தப் பக்கமும் போகவே மாட்டாள் தான் ... அவள் இனி அந்தத் தெருவில் இருந்தால் தானே எப்பக்கமும் போவதற்கு ?
முருகேசனின் மன பரபரப்பு இந்த முறை இப்படி தான் ஓய வேண்டும் போல ?!
இப்படி எல்லோருடைய வாழ்விலும் நிகழ்வது உண்டு தானே !!!


****************************************************************கயல்***********************************************************

Sunday, September 14, 2008









































Saturday, September 13, 2008

சுலோசன முதலியார் பாலம்

அனுபவம் முதிர்ந்த பெரியவர்கள் அல்லது சித்தர்களின் ஒவ்வொரு பேச்சிலும் அழ்ந்த அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது ,அதை உள்ளபடி உணர்ந்து அறிய வேண்டிய கடமையும் ...கட்டாயமும் நம்மைப் போன்ற மனிதர்களின் தேவை ஆகி விட்டதென்னவோ உண்மை ...ஏனெனில் கஷ்டம் ..நஷ்டம் என்பதெல்லாம் லௌகீக வாழ்வில் மூழ்கி விட்ட குடும்பஸ்தர்களுக்கு தானே தவிர சித்தர்களுக்கு இல்லை ,
நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த கதையைப் படித்து பாருங்கள் .

கி.ராஜநாராயணன்

அந்தக்காலத்தில், இப்போது போன்ற நவீன வகான வசதிகள் ஏற்படாத காலம். காசிக்குப் போகிறவர்களெல்லாம் நடந்தேதாம் போகணும். போய்த் திரும்புகிறதென்பது பெரிய்யபாடு. காசி என்றால் அந்த ஒரு சேத்திரம் மட்டுமல்ல; அதைத் தொடுத்துப் பல சேத்திரங்களுக்கும் போகிறது என்றும் உண்டு. போய்த் திரும்ப மாசக் கணக்கு என்றில்லை. வருசக்கணக்கும் ஆகிவிடும். அதுவும் வயோதிகக் காலம் என்று ஆகிவிட்டால் அவ்வளவுதாம்; ஒரு நாடு என்று போகிறவர்கள் திருநாடு (மோட்சம் (சாவு) வைணவ வழக்குச் சொல். திருநாடு) போய்ச் சேர்ந்து விடுகிறதும் உண்டு. சுலோசன முதலியாருக்கு ஒரு சொந்தக்கார அம்மையார் இருந்தார். விதவை, பிள்ளை குட்டி கிடையாது. வயதும் ஆகிவிட்டது. காசிச் சேத்திரம் போய் உயிரை விட்டால் நேராய்க் கைலாசமே போய்ச் சேர்ந்துவிடலாம் என்று புறப்பட்டார். தன்னிடம் இருந்ததை எல்லாம் ஒரு பொட்டலமாக்கிக் கட்டித் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான சுலோசன முதலியாரிடம் தந்து, திரும்ப வந்தால் வாங்கிக்கிறேன் என்று தந்துவிட்டுப் போனவர்தாம். வருசங்கள் பல ஆகிவிட்டன.இனி ஆள் வராது என்று ஆகிவிட்டது. அந்தப் பொட்டலத்தை என்ன செய்ய என்று தெரியவில்லை. அப்படி அதில் என்ன பிரமாதமாய் இருக்கப் போகிறது என்று அவிழ்த்துப் பார்த்தால்... வைர வைடூரியம் பதித்த தங்க நகைகள், தங்கக் காசுகள் என்று விலை மதிக்கமுடியாத முதல் இருந்தது. அந்தப் பொட்டணம் அங்கே இதுவரை யாரும் சட்டை பண்ணாத ஒரு இடத்தில், அவருடைய அவ்வளவு பெரிய வீட்டில், ஒரு அறையின் மூலையில் பரணில் கேட்பார் அற்றுக் கிடந்தது.சரி; இன்னுங் கொஞ்சநாள் காத்திருந்து பார்ப்போம் என்று பார்த்தார் முதலியார். நாட்கள் வருசங்கள் என்று காலம் போய்க்கொண்டே இருந்தது. அந்த அம்மையாருக்கு வேற அக்குதொக்கு என்று யாரும் கிடையாது. இருந்தால் அவர்களிடமாவது கூப்பிட்டுத் தந்துவிடலாம். என்ன செய்ய, யாரிட்டெக் கேட்க என்று தட்டளியுதார்.அந்த ஊரில் முதலியார் மதிக்கிற ஒரு சாமியார் இருந்தார். அவரைப் பெரிய்ய சித்தர், யோகி என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியான சித்தர்கள் யோகிகள் சமாச்சாரமெல்லாம் ரொம்ப விநோதமாக இருக்கும். அவர்கள் வாயைத் திறக்கமாட்டார்கள். திறந்து பேசினால் என்ன சொல்லுகிறார் என்று அதை விளக்கிச் சொல்ல அதுபோல இன்னொரு சாமியாரிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேணும்! முதலியார் போய்ச் சேர்ந்த நேரம், அந்தச் சாமியார் கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டிருந்தார். இவருக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. வந்து நின்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது. சரி, போய்ட்டு இன்னொரு சமயம் வருவோம் என்று திரும்பி ஒரு எட்டு எடுத்து வைத்திருப்பார். ‘யாருடா’ என்ற குரல் கேட்டது.சாமீ; அடியேன் வந்திருக்கேம் என்று சொல்லி, நெடுஞ்சாங்கிடையாக் கால்லெ விழுந்து சேவித்தார்.எழுந்து கும்பிட்டுக்கொண்டே நின்றார். சாமியார், என்ன ஏது என்று கேட்காமல், பேசாமல் கம்மென்று முதலியாரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சரி; சாமியார் கேக்கமாட்டார். நாமதாம் சொல்லணும் என்று விசயத்தை ஆதியோட அந்தமாய் நடந்ததையெல்லாத்தையும் சொல்லி முடித்துவிட்டு, ‘சாமி, இப்போ அந்தப் பொட்டணத்தை நா என்ன செய்யட்டும்’ என்று கேட்டார்.‘ஆத்துல கொண்டு போடு போ’ என்றாராம்! முதலியார் மனசுக்குள்ளே சிரிப்பு ஒரு பக்கம்; வருத்தம் ஒரு பக்கம். இந்தக் கோட்டிக்காரச் சாமியார் இப்படி சொல்லீட்டாரே என்று.வெள்ளம் போற ஆத்துல போடுறதா. வெறும் ஆத்துல போடுறதா என்று கேட்கலாமா என்று தோண்ணதாம்.அது வேற கோவப்பட்டு ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லீட்டா என்ன செய்ய சரீன்னு சொல்லி, திரும்ப ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துட்டார். தாமிரபரணி ஆத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ஊர்ல முதலியாருக்கு நஞ்சை நிலங்கள் இருந்தன. அந்த ஆண்டு நெல் நல்ல விளைச்சல். அறுவடை முடிந்த நெல் மூட்டைகள் வண்டிகள்ளெ பாரம் ஏத்தி ஆத்தைக் கடந்து வந்தபோது, வெள்ளம் ஆத்துல பெருவாரியா வந்து, ஆட்கள், வண்டி மாடுகள், நெல் மூட்டைகள் என்று எல்லாம் ஆத்தோடு போய்விட்டன. முதலியாருடைய நெல்வண்டிகள் மட்டுமில்லை; பல பேருடைய நெல் மூட்டைகளும் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டன.எல்லோருக்குமே அப்பதான் தெரிந்தது. ஒரு பாலம் கட்டி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று சரி; இப்போ பாலம் கட்டணும். சர்க்கார் அனுமதி தந்தது; கொஞ்சம் உதவியும் கிடைத்தது. தன்னிடமிருந்த பணத்தையும் போடலாம். மீதிக்கு என்ன செய்ய. அப்பதான் ஞாபகம் வந்ததாம். அந்தச் சாமியார் சொன்ன ‘ஆத்துல கொண்டுப் போடுடா’ என்ற வாசகம்.பாலத்துக்குச் சுலோசன முதலியார் வாணம் (அஸ்திவாரம்) தோண்ட ஆரம்பிக்கும்போது சிந்துபூந்துறையிலுள்ள பெரிய மனிதர்களை அழைத்திருக்கிறார். அப்படி வந்தவர்களில் ஒரு வயது முதிர்ந்த பெரியவர் சொன்னார். ‘நாஞ் சின்ன புள்ளெயா இருந்தப்பொ இங்கே ஒரு பாலம் இருந்தது. அந்தப் பாலம் ஒரு பேமழை வெள்ளத்துல அடிச்சிட்டுப் போயிட்டது’.முதலியாருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருந்தது.அந்தக் காலத்தில் சிமெண்டு கிடையாது காரைதான். காரைச் சாந்துக்குப் கடுக்காய், கருப்பட்டி, பதநீர் சேர்த்து குழைத்துப் பக்குவப்படுத்திக் கட்டினால் பாறை போல் உறுதியாக நிற்கும். அப்படி கட்டப்பட்டதுதான் இந்த சுலோசன முதலியார் பாலம்.நாடு வெள்ளை ஆட்சியிடமிருந்து நம்மவர்களுக்குக் கை மாறிய பிறகு வாகன போக்குவரத்து எல்லாம் அதிகமாகியதால் அகலமான பாலம் தேவைப்பட்டது. சுலோச முதலியார் பாலம் ரொம்ப பழையது. அதை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய ஒரு அகலமான பாலம் கட்டுவது என அரசு தீர்மானித்தது. பாலத்தை இடிக்க ஆரம்பித்தவர்கள்; இடிக்கவே முடியவில்லை. இடிக்கக் காண்டிராக்ட் எடுத்தவர் மேலிடத்தில் போய் சொன்னார். பெரிய பெரிய இன்சினீயர்களெல்லாம் வந்து பார்த்துவிட்டு, இது இடிக்கவேண்டிய பாலமில்லை. ரொம்ப உறுதியாக நிற்கிறது. இதன் பக்கத்திலேயே இதை ஒட்டி ஒரு பாலம் கட்டி இதோடு சேர்த்து அகலமாக்கிவிடலாம் என்று சொல்லி, அதேபடி சேர்த்துவிட்டார்கள். இன்றும் சுலோசன முதலியார் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது இந்தப் பாலம்.

நன்றி கீற்று.காம்

Friday, August 29, 2008

என்ன என் கையில் ?இரண்டாம் பாகம்

அஹிம்சை என் கையில்
ஆளை மிரட்டும்
ஹிம்சை என் கையில்
இன்பம் என் கையில்
அதை விரட்டும்
துன்பம் என் கையில்
வாழ்வு என் கையில்
அதில் ஒழிந்து
மருட்டும்
சாவும் சில நேரம் என் கையில்
அடுதவனுக்குதவும்
நெஞ்சம் என் கையில்
பிறரை கண்டு
புழுங்கும்
வஞ்சம்
என் கையில்
என்ன என் கையில்
ஜகத்தை
ஜெயிக்கும்
இகத்தை
அடக்கும்
அகத்தை
மடக்கும்
மந்திரம்
என் கையில்
என்ன என் கையில் ?
இந்த வாழ்வு
என் கையில்
என்கையில் என்ன
இல்லை என்கையில் ?